தேமுதிக நிர்வாகிகளின் நிலையை பார்த்து பாரிதாபம் கொள்கிறேன் – திமுக பொருளாளர் துரைமுருகன் !
தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இது தொடர்பாக தேமுதிக துணை தலைவர் சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது, தேமுதிக நிர்வாகிகளான அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர். ஒரே மாவட்டத்தை சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம். உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது என்று என்று கூறினார்.
சுதீஷ் பேட்டி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்து கூறியதாவது:
தேமுதிக நிர்வாகிகள் இரண்டு பேர் வந்து என்னை சந்தித்தனர். ஆனால் அவர்களை எனக்கு தெரியாது. நீங்கள் வந்தது உங்கள் தலைவருக்கு தெரியுமா என்றேன், தலைவர் சொல்லியே வந்தோம் என கூறினார்கள். பின்னர் தேமுதிக நிர்வாகிகளான அனகை முருகேசனும், இளங்கோவனும் திமுக உடன் இணைய வேண்டும் என விரும்புவதாக கூறினார்.
ஆனால் இப்போது திமுக உடன் அரசியல் பேசவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காகவே என்னை வந்து சந்தித்ததாக இளங்கோவன், அனகை முருகேசன் கூறுகின்றனர். தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே மாற்றி பேசுகின்றனர். அரசியலை தவிர, என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. என்னை சந்தித்த தேமுதிக நிர்வாகிகளின் நிலையை பார்த்து பாரிதாபம் கொள்கிறேன்.
நேற்று சுதீஷ் என்னிடம் கூட்டணி தொடர்பாக பேசினார். அவர் மீது நான் கொண்டிருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்திக் கொண்டார். இதையெல்லாம் பார்க்கும் போது தேமுதிக-வினர் நொந்து போய் உள்ளது நன்றாக தெரிகிறது. தேமுதிகவின் நிலைமையை பார்த்து பரிதாபப்படுகிறேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.