ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கை…
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது. இதில் ஆப்கானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சிலர் உயிரிழந்தாக சொல்லப்பட்டது. இதுவே இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்குப்பிரதானக்காரணமாகஇருக்கிறது.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை நடத்தியது. பல்வேறு இடங்களைக் குறிவைத்து ஆப்கன் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு ராணுவ ஸ்டேஷன்கள் ஆப்கன் வசம் வந்துள்ள சூழலில், பல வீரர்கள் உயிரோடும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆப்கான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ப் பதற்றம் உச்சத்திற்குப் போய் இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், “எங்களின் பொறுமைக்கு ஒரு வரம்பு உள்ளது. எங்களுக்கும் உங்களுக்கும் இடையே இப்போது போர் வந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். வன்முறை தீவிரமடைந்த நிலையில், இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் தாக்குதல் நடந்ததை ஆப்கானிஸ்தான் உறுதி செய்துள்ளது. இருப்பினும், ஆப்கன் தலைநகரில் இந்தத் தாக்குதல்கள் எங்கு நடந்தன அல்லது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் இல்லை. பாகிஸ்தான், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார். மறுபுறம் பாகிஸ்தான் தரப்பும் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் தாக்குதலில் தங்கள் ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையும் நிராகரித்தது. ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கு எதிராக ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.