காந்தி, நேரு சிலைகளை சுதந்திர தின நிகழ்ச்சிக்காக மறைப்பதா?
. புதுச்சேரி சுதந்திர தின நிகழ்ச்சிக்காக காந்தி, நேரு சிலைகள் மறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காந்தி-நேரு சிலை மறைப்பு புதுவை கடற்கரை காந்தி திடலில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்ற உள்ளார். இதற்காக காந்திசிலையை மறைத்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நேரு சிலையும் மறைக்கப்பட்டுள்ளது. இது தலைவர்களை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது. இந்த தடுப்புகள் தேவையற்றது. இதன் மீது முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே தியாக சுவரில் சவார்க்கர் பெயரை பதிப்பது தொடர்பாக சர்ச்சை உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் வீட்டில் தேசியக்கொடி ஏற்றவேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாதவர்கள் எல்லாம் நமக்கு உபதேசம் செய்கின்றனர் கடன்சுமை அதிகரிப்பு புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் மானியம் கடந்த ஆண்டைவிட ரூ.150 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கும் அளவு ரூ.1,900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.8 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. இப்போது நமது கடன் சுமை இன்னும் அதிகரிக்கும். மாநிலத்தின் நிதிச்சுமையையும் கூடும். மத்திய அரசு நமது மாநிலத்துக்கு மானியமாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்கவேண்டும். ஆனால் ரூ.1,700 கோடிதான் தருகிறது. கடன்சுமை தொடர்ந்து அதிகரிப்பது மாநில நலனுக்கு உகந்ததல்ல. காவல்துறை கூட்டணி புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் தொடர்கிறது. குறிப்பாக ரெட்டியார்பாளையம், மூலக்குளம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். நைனார்மண்டபம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கிட சாலையை அகலப்படுத்த வேண்டும். புதுவையில் கஞ்சா வியாபாரம் தாராளமாக நடக்கிறது. பெரிய கூட்டமே இதில் ஈடுபட்டுள்ளது. அதை தடுக்க காவல்துறை விழிப்போடு இருக்கவேண்டும். ஆனால் கஞ்சா விற்பனையாளர்களோடு காவல்துறை கூட்டணி வைத்துள்ளது. கஞ்சா விற்பனையாளர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.