மணிப்பூர் முதல் மும்பை வரை ஜன. 14 முதல் ராகுல் யாத்திரை…
மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுல்காந்தியின் நடைபயணம் வரும் ஜன. 14 தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கினார். இந்த பயணம் இந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி காஷ்மீரில் முடிந்தது. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி, 2ம் கட்ட யாத்திரையை தொடங்க உள்ளதாக கடந்த சில வாரங்களாக கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று காங்கிரஸ் வெளியிட்ட தகவலின்படி, அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரை மணிப்பூர் முதல் மும்பை வரையில் ராகுல்காந்தி ‘பாரத நியாய யாத்திரை’யை தொடங்கவுள்ளார். இந்த குறுகிய கால நடைப்பயணமானது, பாதயாத்திரையுடன் கூடிய பேருந்தில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 14 மாநிலங்களில் 6,200 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பயணம் இருக்கும். ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பொருளாதார சமத்துவமின்மை, எதேச்சதிகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை நடைபயணத்தில் ராகுல் காந்தி முன்வைப்பார்.பாரத் ஜோடோ யாத்திரை தொடர்ந்து தற்போது பாரத் நியாய யாத்திரை தொடங்கப்பட உள்ளதால், இந்த யாத்திரையானது பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான பிரச்னைகளை எழுப்பும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் கூறினர்.