கடலூர்–என்எல்சி முற்றுகை போராட்டத்தில்வன்முறை…,
கடலூர்: என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கடலூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம், இரண்டாம் கட்ட சுரங்க பணிக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் வயல்வெளியில் பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டி பைப்களை புதைத்து வாய்க்கால் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டம் தொடர்பாக அன்புமணி உட்பட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் 10 காவலர்கள், மூதாட்டி ஒருவர் காயமடைந்தனர். சில போலீசாருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து பாமகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசியதால் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட ஒருசில மணி நேரத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கடலூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.