டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுக்கலாம்….
அதிமுகவில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அவர், பாஜகவுடன் இணக்கமாக இருந்து வந்தார். இதனால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் செங்கோட்டையனின் பாதை தேசிய கட்சியுடன் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்தது.ஆனால் திடீரென தவெகவில் இணைந்திருப்பது விவாதப் பொருளாகி மாறி இருக்கிறது. ஆனால் செங்கோட்டையனின் முடிவுக்கு பின், பாஜக செய்த தாமதமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையனை அழைத்து பாஜக தலைமை தான் பேசியது. அதற்கான பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்ட போது, பாஜகவிடம் இருந்து முறையாக ஆதரவு இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் ஜிகே வாசன் வழியாக பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் இறங்கி வரவில்லை. அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். சட்டசபைத் தேர்தலும் நெருங்கிவிட்டதால், பாஜகவுக்கும் வேறு வழியில்லாமல் போனது.இதனால்செங்கோட்டையன் தாமதிக்காமல் தவெக பக்கம் செல்வது என்று முடிவை எடுத்துவிட்டார். தற்போது செங்கோட்டையனின் முடிவு அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பலருக்கும் ஒரு பாதையாக அமைந்துள்ளது. அது அதிமுக என்று மட்டுமல்லாமல், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினருக்கும் கதவுகளை திறந்து வைத்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு 4 மாதங்கள்மட்டுமே இருக்கும் சூழலில், அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதில் இரு தரப்பும் குறியாக இருக்கின்றனர்.அதிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலர் பதவியில் இருப்பதால், மீண்டும் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர். அதனால்
வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸை விட்டு விலகும் முடிவை கூட எடுக்கலாம். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் விலகி வந்தாலும், அவர்கள் தொடர்ந்து பாஜகவுடன் பேசி வருகின்றனர். அண்மையில் கூட டிடிவி தினகரன் – அண்ணாமலை இடையிலான சந்திப்பு நடைபெற்றது. ஆனால் செங்கோட்டையனின் முடிவு இரு தரப்பையும் வேகமாக முடிவு எடுக்க தள்ளி இருக்கிறது. ஏற்கனவே டிசம்பர் 15ஆம் தேதி வரை ஓபிஎஸ் கெடு விதித்துள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் அமமுக கூட்டணி முடிவை எடுக்கும் என்று டிடிவி தினகரனும் அறிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் இருவரையும் பாஜக இதுவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை. பாஜக தரப்பில் இவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பாஜகவை பகைத்து கொள்ளவிரும்பாத டிடிவி தினகரன், ஓபிஎஸ் முடிவை கவனித்துவிட்டு சிறிது காலத்திற்கு பின் கூட்டணி முடிவை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.