பீகாரை விட தமிழ்நாட்டில் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறோம்..
தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் உண்மையில் தமிழகம் பீகார் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பீகார் தொழிலாளர்களே பதிலும் அளித்துள்ளனர். தங்கள் ஊரில் நல்ல வேலை சம்பளம் கிடைக்காத நிலையில், தமிழகத்தில் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர் பீகார் தொழிலாளர்கள்.பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களுக்கு துன்பம் இழைப்பதாக பேசி இருந்தார்.பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பொய்யான செய்தியை கூறி தமிழர்கள் மீதான வன்மத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டுகின்றனர் தமிழக அரசியல் கட்சிகளும், பொது மக்களும்.தற்போது மட்டுமல்ல ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பாஜக தேசிய தலைமை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களை விமர்சித்து வந்திருக்கிறது. குறிப்பாக ஒடிசா தேர்தலின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பிகே பாண்டியனை உருவகமாகக் கொண்டு பல்வேறு மோசமான விளம்பரங்களை செய்தது. அதிர்ச்சி தரும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூரி ஜெகநாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என கூறியதோடு ஒரிசாவை தமிழர்கள் ஆள்வதா என பேசியது பலத்த
அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்கள் குறித்த பேச்சு கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையில் எப்படி இருக்கிறது தமிழகம் என திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்து வரும் இரு தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள் தமிழகத்தை பாதுகாப்பான வீடாகவே கருதுவதாக கூறுகின்றனர்.எனது தந்தை பீகார் மாநிலத்தில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக ஆசை இருந்தும் என்னால் படிக்க முடியவில்லை. குடும்ப வறுமையால் நான் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தேன். நூற்பாலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனது ஊரில் வேலை கிடைக்காது, மேலும் நல்ல சம்பளமும் கிடைக்காது. ஆனால் இங்கு நல்ல சம்பளம் கிடைப்பது உடன் தங்குவதற்கு நல்ல இடமும் எங்கள் ஊர் உணவும் மற்றும் நாங்கள் விரும்பினால் தமிழ்நாட்டு உணவும் கிடைக்கின்றது. எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டில் பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறேன். என்னுடைய சம்பளத்தின் மூலம் எனது குடும்பம் அங்கு நிம்மதியாக வாழ்வதுடன் எனது இரு தங்கைகளின் படிப்பு செலவுக்கும் என்னால் கொடுக்க முடிகின்றது என்கிறார் திண்டுக்கல் வேலை பார்த்து வரும் ஜெமாஹேம்பரம்.பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திரகுமார் ஜடா பேசும் போது,” கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக தொழிலாளியாக வேலைக்கு வந்தேன். ஆர்வ மிகுதியால் தமிழ் கற்றுக்கொண்டு நூற்பாலை நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெற்று நம்பிக்கையுடன் இருந்தேன். இதனையடுத்து நூற்பாலை நிர்வாகத்தின் அனுமதியுடன் பீகார் மாநிலத்தில் ஏழ்மையில் உள்ள பெண்களை நூற்பாலை நிர்வாகத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்து வேலைக்கு சேர்த்தேன். வேலைக்கு வந்த இளம் பெண்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் இங்குள்ள பாதுகாப்பு மற்றும் நல்ல சம்பளம் குறித்து தெரிவித்ததால் மேலும் பலர் வேலைக்கு வந்தனர். தற்பொழுது 50 பேர்களை நூற்பாலைக்கு அனுப்பி மேஸ்திரியாக செயல்பட்டு வருகிறேன்” என்று பெருமையுடன் தெரிவித்தார்.