செங்குன்றம் மசூதி அருகே வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணை..
சென்னை தேனாம்பேட்டை டிஎம்ஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு, நவீன ரக துப்பாக்கிகளை சிலர் எடுத்துச் செல்வதாகவும், இதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தபோது, அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை எனத் தெரிந்தது. இதையடுத்து வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் செய்தி பரப்பிய அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் வகையில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதன் அடிப்படையில் செங்குன்றம் பாடியநல்லூர் அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்த ரா.செல்வம் (39) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.