சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சமத்துவ விருந்து….

சுதந்திர தினத்தை ஒட்டி திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு, நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சென்னையிலுள்ள முக்கிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் சட்டப்பேரவை தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.குறிப்பாக திருவல்லிக்கேணி உள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன் கலந்து கொள்கின்றனர். அதேபோல, மயிலாப்பூர் மாதவப் பெருமாள் திருக்கோயிலில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் மெய்யநாதனும், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் சமத்துவ விருந்தில் கலந்து கொள்கின்றனர்.