புதிதாக துவங்கப்பட்ட மூன்று காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டடம் ! மாநகர காவல் ஆணையர் தகவல்
கோவை., மே. 27 :
கோவை மாநகரில் 3 மகளிர் காவல் நிலையங்கள், 17 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் என 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் ஆகிய இடங்களில், 3 புதிய காவல் நிலையங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி கவுண்டம்பாளையம் காவல் நிலையம் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்திலும், சுந்தராபுரம் காவல் நிலையம் சிட்கோ அருகிலும், ஆயிஷா மஹால் அருகில் கரும்புக்கடை காவல் நிலையம் ஆகியவை வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களை சொந்த கட்டடத்துக்கு மாற்ற கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் கூறியதாவது, சுந்தராபும், கவுண்டம்பாளையம் காவல் நிலையங்கள் கட்ட மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் இடம் ஒதுக்கப்பட உள்ளன. கரும்புகடை காவல் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்