பாமக நிறுவனர் ராமதாஸ்.,தலைவர் அன்புமணி ராமதாஸ்இடையேயானமோதல் தொடர்கிறதா..?
பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ். 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். முன்னதாக இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். எனினும் திட்டமிட்டபடி நடைபயணத்துக்கான ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலச்சினையையும், ‘உரிமைப் பயணம் ‘ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, 25 ஆம் தேதி திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார். ராமதாஸ் பேட்டி இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போது பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சிக்கான வேரும், வியர்வையும் தைலாபுரத்தில் மட்டும் தான் உள்ளது. ஒரே தலைமை தான் ஒரே தலைவர் தான். ஆன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது. தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் ஒரு துளியும் பயன் இல்லை.தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். காவல்துறை தலைமைக்கும், உள்துறை தலைமைக்கும் எல்லாம் தெரியும். முறைப்படி புகார் அளித்திருக்கிறோம். பா.ம.க தலைவர் என்ற பெயரோடு அடையாளத்தோடு யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள்.” எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ். மேலும் பேசிய ராமதாஸ், “எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.வேளான்மை துறை,
தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளாண் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல. உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி, திட்டம் செயல்படுத்தவில்லை. விவசாயிகளுக்கும். வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும். தலைநகர் சென்னையில் எத்தனை நூலகங்கள் இருந்தாலும் கன்னிமாரா தேசிய நூலகம் தனிபெருமை கொண்டது. சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகவதால் உரிய தீர்வை அளிக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.