அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி….
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘நாடு வலுப்பெற்றது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதாரத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது நாட்டில் நீதித்துறையோ, அரசு நிர்வாகமோ, நாடாளுமன்றமோ உயர்ந்தது அல்ல, அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது.அதன் மற்ற 3 தூண்களும் அரசியலமைப்பின்படி இணைந்துசெயல்படவேண்டும்.அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அது அடிப்படை கோட்பாட்டில் கை வைக்க முடியாது. குறிப்பாக அரசியலமைப்பின் அடிப்படைஅம்சங்களான சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் போன்றவற்றை நாடாளுமன்றம் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது. அரசியலமைப்பின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுக்கொன்று உரிய மரியாதை அளிக்க வேண்டும்’’ என்றார்.