அயோத்தி—161 அடி பிரம்மாண்ட கோபுரத்தில் காவி கொடியேற்றும் நிகழ்வு….
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்கிற பகுதி உள்ளது. அங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் நீண்ட கால கனவான அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதை, பாஜகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அதை பெரிய சாதனையாக முன் வைத்தனர்.இந்நிலையில் கோயில் கட்டப்பட்டதை கொண்டாடும் விதமாக, ராமர் கோயிலில் கொடியேற்ற திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) அயோத்தி ராமர் கோயில் செல்கிறார். அங்கு காலை 10 மணியளவில் செல்லும் மோடி அகத்தியர், வசிஸ்டர், விஸ்வாமித்ரர், வால்மீகி, குகன், அகில்யா, சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் வழிபாடு செய்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் அன்னபூர்ணா தேவி கோயிலில் தரிசனம் செய்கிறார். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார். நண்பகல் 12
மணியளவில் அங்கு பிரம்மாண்ட காவி கொடியை ஏற்றி மோடி மக்கள் முன்பு உரையாற்ற உள்ளார். 161 அடி பிரம்மாண்டகோபுரத்தில்காவிகொடிஏற்றப்படவுள்ளது. சுமார் 10 அடி உயரம், 20 அடி நீளத்தில் செங்கோண வடிவில் காவி கொடி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சூரியன் உருவம், ஓம் உள்ளிட்ட வாசகம் இடம் பெற்றுள்ளது. ராமர் கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்ததுடன், கலாச்சார கொண்டாட்டமாகவும், தேசிய ஒற்றுமையின் புதிய சின்னமாக இதை முன்னிறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சுமார் 10 டன் மலர்களுடன் கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்மட நாடு முழுவதும் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ராமர் கோயில் செல்வது தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.