அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வெளிப்படையாகவே எச்சரிக்கை..
டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என டிரம்ப் துடித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே டிரம்ப் இந்த யோசனையை முன்வைத்து வந்தாலும் கடந்தாண்டு தான் இதில் மிகவும் தீவிரமாக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.இதற்கிடையே அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுக்க முயன்றால் முதலில் சுட்டு தள்ளுவோம்.. அதன் பிறகே என்னவென்று கேள்வி கேட்போம் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1952ஆம் ஆண்டு போர்ப் பிரகடன விதிகளின்படி, படையெடுப்பு போன்ற சூழல்களில் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் படையெடுத்து வருவோரைத் தாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி இப்போதும் கூட அமலில் இருப்பதை உறுதி செய்துள்ளது டென்மார்க்! சமீபத்தில் தான் கிரீன்லாந்து நாட்டை அமெரிக்கா கட்டுப்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு முக்கியம் என்றும் இதற்கு ராணுவ நடவடிக்கையும் கூட ஒரு ஆப்ஷன் என்றே வெள்ளை மாளிகை தரப்பு கூறியிருந்தது. இது தொடர்பாக வெள்ளை மாளிகைச் செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், “கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முன்னுரிமை.. இது ஆர்க்டிக் பிராந்தியத்தில் நமது எதிரிகளைத்தடுப்பதற்குமுக்கியமானதாக உள்ளது. இதற்காக அதிபரும் அவரது குழுவும் விவாதித்து வருகின்றனர். ராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு ஆப்ஷனாகவே இருக்கிறது” என்றார்.இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ரூபியோ, அடுத்த வாரம் டேனிஷ் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்து பேச்சு எழுந்த பிறகு இரு தரப்பு முக்கிய அதிகாரிகளும் சந்திப்பது இதுவே முதல்முறை. இதனால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. டிரம்ப் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார்.. ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்து அவர் தீவிரமாக யோசிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது. அதேநேரம் அமெரிக்காவின் இந்த ஐடியாவை டென்மார்க் திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதை கிரீன்லாந்து திட்டவட்டமாகக் கூறி வருகிறது.ஐரோப்பியத் தலைவர்களும் அமெரிக்காவின் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்” என்றனர். அதேபோல அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் டென்மார்க்கும் இருக்கும் நிலையில், அமெரிக்கா ராணுவத்தைப் பயன்படுத்துவது நோட்டோ அமைப்பையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்ஸனும் எச்சரித்துள்ளார். ஆர்க்டிக் பகுதியில் கடந்த சில காலமாகவே சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதைக் கவுண்டர் செய்ய கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கருதுகிறது. உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து தனது கட்டுக்குள் வந்தால் இரு நாடுகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்பதாலேயே கிரீன்லாந்தை வாங்க ட்ரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.