நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், மே 17 ஆம் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
மே 3 ஆம் தேதியுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்தது.
இந்நிலையில், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பின் அளவைப் பொருத்து, நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதனைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானம், ரயில், மெட்ரோ போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை மீண்டும் நீடிக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படத் தடை மீண்டும் தொடரும்.
மக்கள் அதிகம் கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக அனுமதி இல்லை.
சமூக, அரசியல், பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை திறக்கத் தடை தொடரும்.
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியே வரக்கூடாது.
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை யாரும் தேவையின்றி வெளியே வர அனுமதியில்லை.
அனைத்து மண்டலங்களிலும், வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட அனுமதிக்கப்படும்.
எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் இதற்கு அனுமதி இல்லை.
சிவப்பு மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கால் டாக்சி, ஆட்டோ ரிக்ஷா இயங்க இதுவரை இருந்த தடை தொடரும்.
மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி இல்லை.
சிவப்பு மண்டலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் சில செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு தனி நபர்களும், வாகனங்களும் வெளியே செல்ல அனுமதி உண்டு.
நான்கு சக்கர வானங்களில் ஓட்டுநர் மற்றும் இருவர் பயணிக்கலாம்,
இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.