ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றதும் மாநில அமைச்சர் பதவிகளில் பணிபுரிபவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே பதவி வகிப்பார்கள் என்றும், வேறு நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்கள் புதிய அமைச்சர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். பதவியேற்பின்போதே நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி, ரூபாய் 2 லட்சத்து 56 ஆயிரம் கோடியில் 2022- 2023ஆம் ஆண்டுக்கான வருவாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர், கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியமானது ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும் என்ற அர்த்தத்தை விளக்கும் “தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன், மெய்வருத்தக் கூலி தரும்” எனும் திருக்குறளைத் தெலுங்கு மொழியில் கூறி பட்ஜெட்டைத் துவக்கினார். இவரது இந்தச் செயல் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. பட்ஜெட் உரைக்குப் பின்னர் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பினரும் வளம் பெறுவார்கள். விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதில் அமைச்சர் பதவிகள் பறிபோனவர்கள் வருத்தப்படக்கூடாது என்றும், அவர்களுக்கு மாநில பொறுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமைச்சர் கட்டாயமாக இருக்க வேண்டும் என கூறப்படுவதால், சித்தூர் மாவட்டத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.