சென்னையில் 200 மருத்துவ முகாம்கள் / இதர செய்திகள்
சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 200 வார்டுகளிலும் இன்று (நவம்பர் 5) இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
சபரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு புதிய செல்போன் செயலி
எருமேலி – பம்பை மற்றும் வண்டிப்பெரியார் – சபரிமலை பாரம்பரிய பெருவழிப்பாதை வழியாக சபரிமலைக்கு நடைபயணமாக வரும் அய்யப்ப பக்தர்களுக்காக புதிய செயலி உருவாக்கப்பட இருக்கிறது. வனப்பாதைகளில் ஆபத்தான விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கும் வசதிகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது வருகிற 8ம் தேதி மதியம் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில், அன்று காலை 8.40 மணியிலிருந்து இரவு 7.20 மணி வரை 11 மணிநேரம் மூடப்படுகிறது. கிரகணம் முடிந்த பிறகு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2ல் இருந்து மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.