கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் – வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வியாபாரியின் மனைவி, மகள், ஆகியோர் சிகிச்சைக்காக கீழ்பாக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அந்த வியாபாரியின் வீடு அமைந்துள்ள திருமங்கலம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வியாபாரியின் மூலம் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த நபர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 13 பேரில் 5 பெண்கள், 2 மளிகைக்கடைக்காரர்கள் , மாற்றுத்திறனாளி , 21-வயது உடைய 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர், 13 வயது பள்ளி மாணவன், வங்கி ஊழியர் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அந்த வியாபாரியுடன் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்பில் இருந்த மற்ற வியாபாரிகள் யார்? யார்? என்ற விவரங்களை எல்லாம் சுகாதாரத்துறையுணர் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து பூ மார்க்கெட்டிற்கும் கொரோனா பரவியுள்ளது.சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வந்தார். இவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதை அடுத்து கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, 3 குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அவர் வசித்த பகுதிக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர். முழு ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அதற்க்கு முன்பு வரை அந்த வியாபாரி பூக்கடைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது அந்த மார்கெட்டிற்கு வந்த கொரோனா தொற்று உள்ள நபரால் அவருக்கு நோய் பரவி இருக்கும் என கருதப்படுகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 1000-திற்க்கும்மேற்பட்ட பூ கடைகள் உள்ள நிலையில் , கோயம்பேடு பூ மார்க்கெட் கடந்த 3 நாட்களாக மூடிக்கிடப்பதால் 5 டன் பூக்கள் தேங்கி கிடக்கின்றன.