ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எங்களிடம் உள்ளது:இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் அதிரடி!!
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு செயல் பட்டு வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று திடீரென சந்தித்தனர்.
அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராகத்தான் உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது. போர் விமானங்களை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சிரமமும் கிடையாது.
உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த வேலையும் அங்கு நடக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.