இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து!
பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்து பியூஷ் கோயல் நிதிநிலை அறிக்கை வாசித்தது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்ததாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
இதில் தனிநபர் வருமானத்துக்கான வரிக்கழிவுக்கான உச்சவரம்பை ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்தார். நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி. பிஎஃப் சந்தாரதார்கள் உயிர் இழந்தால் அளிக்கப்பட்டு வந்த 2.5 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தேசிய பென்ஷன் திட்டத்தின் (NPS) அரசு பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு. பசுக்களுக்கு நலத்திட்டம். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் என பல நல திட்டங்களைக் கொண்ட நிதிநிலை அறிக்கையை பியூஷ் கோயல் வாசித்தார்.
இது தொடர்பாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறுகையில், இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மீது அவர் இன்று ஆற்றிய நீளமான உரை நமது பொறுமையை மிகவும் சோதித்து விட்டது. இது இடைக்கால நிதிநிலை அறிக்கை அல்ல. வரும் தேர்தலில் வாக்குகளை கவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.