கடன் தவணைகள்…! கூடுதலாக 3 மாத அவகாசம் தந்த ஆர்பிஐ!
RBI announced new offers
மும்பை:
கடன் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கொரோனாவால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவில் சுருங்கும்.
ரெப்போ ரேட் என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4.40%லிருந்து 4.0 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களில் விலை உயர்ந்துள்ளது; ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரிப்பு. அடுத்த சில மாதங்களில் பருப்புகள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும். வேளாண்துறையின் வளர்ச்சி நம்பிக்கை தருகிறது.
மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. கரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் வரி வசூலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதமாக குறைந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை. வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தக் கூடுதலாக 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடன் தவணைகளைச் செலுத்த கால அவகாசம் தரப்படுகிறது. இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளது என்று கூறினார்.