அறந்தாங்கியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை:முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
Chief Minister edapaddi palanisamy announcement over aranthangi issue
சென்னை:
அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந் நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.