Others
2000 நோட்டுக்களை பற்றி மத்திய நிதியமைச்சர் பதில்—-!
- கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய், 2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்த ரூ.2000 நோட்டுக்கள் போகப்போக புழக்கத்தில் இருந்து குறையத் தொடங்கின. ரூ.2000 நோட்டுக்களின் பயன்பாடு குறைந்து விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு தடை விதித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. அதற்கேற்றார்போல் ஏடிஎம் மையங்களில் ரூ.2,000 நோட்டை காண முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தில் எம்.பி சந்தோஷ் குமார், ஏடிஎம்கள் மூலம் ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதா என்று நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து உள்ளார். அதில், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நிரப்ப வேண்டாம் என வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேலும் வங்கிகள் தங்களின் விருப்பம் போல ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களிடம் ரூ.500 நோட்டுகளை விட ரூ.2000 நோட்டுகள்தான் அதிக புழக்கத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2017ம் ஆண்டு மார்ச் மாதம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 9.5 லட்சம் கோடி எனவும் இது 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது நாட்டின் மொத்த கடன் 155.8 லட்சம் கோடி ரூபாய் எனவும்,இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57 புள்ளி 3 சதவீதம் எனவும் தெரிவித்துள்ளார்.