13 நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தயார் – மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் பேட்டி

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் , இதை கட்டுப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை கடந்த மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.
.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் கொரோனவைரஸின் தாக்கம் தற்போதுவரை குறையாமல் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8356-ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால், கொரோனா சிகிச்சைக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், தனியாருடனும் இணைந்து மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளை தயார்படுத்தி வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. தீவிர சிகிச்சை, ஆக்சிஜன் தேவை என அனைத்திலும் அரசு கவனமாக உள்ளது.
நாடுமுழுவதும் இதுவரை 1.86 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 9000 படுக்கைகள் தயாராக உள்ளன. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை 219 மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் மத்திய அரசு 13 நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.