10 எதிர்க்கட்சிகள்– மணிப்பூர் மக்கள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை..
மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன. பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வழங்கப்படாததை அடுத்து மணிப்பூர் மாநிலத்தின் 10 எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளனர். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மணிப்பூர் மக்கள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் சென்று பல முயற்சிகளை எடுத்த பிறகும் கலவரம் ஓயவில்லை. மோதிக்கொள்ளும் இரு சமுதாயங்களுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் தற்போதைய தேவை. மணிப்பூர் மக்கள் பற்றி பிரதமருக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே அவரது மவுனம் காட்டுகிறது. முதல்வர் பிரேன் சிங்கின் தன்னிச்சையான நடவடிக்கைகள்தான் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு காரணம். பிரேன் சிங் சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் பிரித்தாளும் அரசியலே வன்முறைக்கு காரணம்: பாஜகவின் பிரித்தாளும் அரசியலே மணிப்பூரின் இந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மணிப்பூரில் நிலவும் வன்முறையை தடுப்பதில் மாநில பாஜக அரசு, ஒன்றிய பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடங்கிய மே 3ம் தேதி முதல் தற்போது வரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதுடன் 5 ஆயிரம் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் கலவரத்தால் நூற்றுக்கணக்கான கோயில்களும் தேவாலயங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மக்கள் 60 ஆயிரம் பேர் கலவரம் காரணமாக வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும்: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கடிதத்தில் எதிர்க்கட்சியில் வலியுறுத்தியுள்ளன. மணிப்பூரில் தனி நிர்வாகம் நடத்துவதை எதிர்ப்பதாகவும் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குழுவினரிடம் இருந்து உடனடியாக ஆயுதங்கள் அனைத்தையும் பெற வேண்டுமெனவும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவாரண தொகை போதுமானதாக இல்லை: நிவாரண தொகை போதுமானதாக இல்லை. எனவே உண்மை நிலையை கண்டறிவதற்காக மாநில அரசிடம் இருந்து அறிக்கைகளை பெற்று அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த செலவுகளையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த வாரம் முழுவதும் அவர் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ளார். எனவே பிரதமர் மோடி நாடு திரும்பியதும் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடியாக செல்வாரா? அல்லது மணிப்பூர் கலவரம் தொடர்பாக மேற்கொண்டு உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்படுமா? என்பது தெரியவரும்.