விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளும்!
அக்டோபர் 6-ம் தேதியான நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 முதல் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக கண்டுகளித்ததாகவும், அதில் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலிருந்து கண்டுகளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதியம் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண கூட்ட நெரிசலிலும், வெயிலிலும் காத்திருந்து பார்த்த மக்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, ” உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.தமிழக பாஜக தலைவறான அண்ணாமலை, ” 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு. தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ” சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி
நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். சென்னையில் சாகச நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தன் கடமையில் இருந்து தவறிவிட்ட தமிழக அரசே உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பதிவுஒன்றைப்பதிவிட்டிருக்கிறார்.இதனைத்தொடர்ந்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ” மாநில அரசின் கவனக்குறைவால் வான்படை சாகச நிகழ்வு சாதனையாக அல்லாமல் வேதனையாக மாறிவிட்டது. இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். தன்நலன் பேணாது மக்கள் நலன் பேணும் அரசே மக்களுக்கான அரசு” என்றுதெரிவித்திருக்கிறார்.
