வாலாஜாபாத்– ஒன்றியத்தில் ஊராட்சிகளில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு..,
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பலகோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காடிவாக்கம், மருதம், புத்தகரம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.முதலில் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ரூ.4.32 கோடி மதிப்பில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் 100 குடியிருப்புகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளின் தரம், பணி எந்த நிலையில் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மேட்டுத் தெருவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் நோயாளியின் வீட்டுக்கு சென்று, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.இதேபோல் சிங்காடிவாக்கத்தில் அடர்வு முறையில் மரக்கன்று நடவு செய்தல் முறையை கேட்டறிந்து, அதற்கு 75% மானியத்தில் வழங்கப்பட்ட சொட்டுநீர் பாசன முறையை ஆய்வு செய்தனர். மருதம் ஊராட்சியில் ஆர்கானிக் முறையில் பராமரிக்கப்படும் எலுமிச்சை நடவு பண்ணையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், அங்கு ரூ.4.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகளை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, புத்தகரம் ஊராட்சியில் ரூ.5.91 லட்சம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டிடம், ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அங்கு தோட்டக்கலை சார்பில் செயல்படுத்தப்படும் நாற்றங்கால் பண்ணையையும் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) கவிதா, வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் துணை இயக்குநர் கணேசன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.