ராணிப்பேட்டையில்ஸ்டாலின் பேசியது……
ராணிப்பேட்டை: ‘திராவிட மாடல்’ என்றால் என் முகமும், ‘ஒன்றியம்’ என்று சொன்னால் என குரலும் மக்கள் மனதில் நினைவுக்கு வரும், அது போதும் எனக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.*
ராணிப்பேட்டையில் ரூ.267 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதற்கான விழாவில் ஸ்டாலின் பேசியபோது, ராணிப்பேட்டை என்பதைவிடவும் காந்திபேட்டை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது: ஒவ்வொரு தனி மனிதரின் கோரிக்கைகளையும் கேட்டுபெற அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தோல் காலணி உற்பத்தி செய்வதோடு சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பில் 200 ஏக்கர் பரப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா தொடங்கப்படும். இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக பெண்கள் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும்.பெற்றவர்களை போல இந்த திமுக அரசும் செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன். மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வேன். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர், சில உதிரி கட்சியினர், நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக அலைந்துக் கொண்டிருப்பவர்கள் பேசுகின்றனர். ஆனால், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை நான் சட்டசபையிலேயே பட்டியல் போட்டிருக்கிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் மக்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன்.நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம்? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடிய எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. திமுக அரசின் திட்டங்கள் எதுவும் விளம்பரத்திற்காக செய்வதல்ல; அது மக்களுக்காக செய்வது. விளம்பரம் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே, எனக்கு கிடைத்திருக்கும் புகழையும் பெருமையையும் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான். திராவிடமாடல் என்றால் காலமெல்லாம் எனது முகம்தான் மக்களின் மனதில் நினைவுக்கு வரும். ‘திராவிட மாடல்’ என்றால் என் முகமும், ‘ஒன்றியம்’ என்று சொன்னால் என குரலும் மக்கள் மனதில் நினைவுக்கு வரும் ; அது போதும் எனக்கு. இவ்வாறு அவர் பேசினார்.