மோதிக்கொண்ட ரயில்கள்…என்ன நடந்தது..? 288 பேர் உயிரிழப்பு…
.கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ1, ஏ2 பெட்டிகளும் மற்றும் பி2 முதல் பி9 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன. இதே போன்று, பெங்களூரு – ஹவுரா ரயிலில் 4 பெட்டிகளும் தடம்புரண்டதாக தெரிகிறது. ரயில்களின் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பெருத்த சேதம் அடைந்தன. இந்த விபத்து நடந்த போது, நிலநடுக்கம் ஏற்பட்டது போல ரயிலின் பெட்டிகள் குலுங்கியதாகவும், என்னவென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் அதிகம் சேதம் அடைந்ததாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஏசி பெட்டிகளில் இருந்து புகை வெளியேறியதால், மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் உடனடியாக பல்வேறு வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் இதுவரை சுமார் 288 பேர் உயிரிழந்துப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்று மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.