மீனவர் ராஜாவின் உடல் தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீட்பு
மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர் உடல் கண்டெடுப்பால் தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சேலம் மாவட்டம் அருகே தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு சென்றுகொண்டுள்ளது. இது ஒரு வனப்பகுதியாகும். வனப்பகுதியை சேர்ந்த பாலாற்றில் கோவிந்தபாடியை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவ்வப்போது சென்று மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மீன்பிடிக்க சென்ற ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மான் வேட்டைக்கு வந்துள்ளதாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிசூடு நடைபெற்றவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் ராஜா மாயமானார். இதனை அடுத்து ராஜா பாலாற்றில் விழுந்திருக்கலாம், அல்லது துப்பாக்கிசூட்டில் இறந்திருக்கலாம் என தேடிவந்த நிலையில் தற்போது ராஜாவின் உடல் பாலாற்றில் மிதந்து வந்த நிலையில் மீட்டுள்ளனர்.இதனை அடுத்து தமிழ்நாடு – கர்நாடக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால் தமிழ்நாடு – கர்நாடக எல்லை பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.