மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு– அமலாக்கத்துறை இணை இயக்குநருக்கு சம்மன்:
. தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி காலை 7 மணி முதல் 18 மணி நேரம் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து 14ம் தேதி அதிகாலை 2 மணியளவில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி பாதிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, மருத்துவனைக்கு வந்து செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், தனது கணவரை கைது செய்தபோது மனித உரிமைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரி செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலா தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன், உறுப்பினர்கள் ராஜ இளங்கோ, வி.கண்ணதாசன் ஆகியோர் விசாரித்து, இந்த புகார் மீது அறிக்கையுடன் விளக்கம் தர அமலாக்க துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரங்களுக்குள் ஆவணங்களுடன் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.