புழல்- ஏரியின் கரை உடையும் அபாயம்,ஆபத்து,அச்சத்தில்மக்கள்.
தொடர் கனமழையால் நிரம்பி வழியும் புழல் ஏரியின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சரிந்து விழுந்த சாலையும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயல் கொடுத்த அதிகனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. கடந்த நான்காம் தேதி சென்னையை புயல் நெருங்கிய போது 8,500 கன அடி நீர் ஏரிக்கு வந்ததால் அன்று மதியமே 4000 கன அடியாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர் கனமழையால் புழல் ஏரிக்கு வந்த நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அந்த ஏரியின் உபரி நீர் 7000 கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஏரி மீது வரும் பொது மக்களை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.புழல் ஏரியின் கரை உடைந்தால் திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் அனைத்தும் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுற்றுசுவர் உடைந்து சாலையும் சேதமடைந்துள்ள நிலையில் தற்போது கரை உடையும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கரை உடைந்தால் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழும் என்பது புழல் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.