புதுவை–பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயர கல்வி அவசியம்…
இளையோர் பரிமாற்றம் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி புதுவையில் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக தெலுங்கானா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து 200 இளைஞர்கள் புதுச்சேரி வந்துள்ளனர். இந்த இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்கவிழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திராவின் துணை இயக்குனர் தெய்வசிகாமணி வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இளையோர் விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தொழில்நுட்பங்கள்… 5 மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியின மக்கள் அடர்ந்த காடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களை சில இடங்களில் காண்பதே அரிதானது. அவர்களது வாழ்க்கை முறை மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் பிற மாநில கலாசாரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இன்றைய உலகில் எத்தனையோ வளர்ச்சி, தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் உள்ளனர். கல்வி அவசியம் அவர்கள் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. அத்தகையவர்களின் வாழ்க்கைத்தரம் உயர கல்வி அவசியம். அதை தரவேண்டியது நமது கடமை. புதுவை மாநிலத்திலும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இலவச மனைப்பட்டா, கல்வீடு கட்ட மானியம் தந்துள்ளோம். நாங்கள் சொல்வதை கேட்டு அவர்கள் முன்னேறி வருகிறார்கள். தங்களை தாங்களே அவர்கள் வெளியுலக வாழ்க்கைக்கு தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கைத்தரம் உயர மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். லட்சுமிநாராயணன் விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், பல்வேறு இன மக்கள் வாழ்ந்தாலும் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் இங்கு வசிக்கின்றனர். புதுச்சேரி ஒரு மினி இந்தியாவாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி 14 வருடங்களாக முதல்-அமைச்சராக இருந்து மக்கள் வளர்ச்சி திட்டங்களை தந்துகொண்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார். நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திராவின் இயக்குனர் செந்தில்குமார், தேசிய விருதாளர் ஆதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பழங்குடி இளையோர்களின் நடன நிகழ்ச்சிகளையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ரசித்து பார்த்தார்..