புதுச்சேரி- கடலூர் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருந்து வருகிறது. பரபரப்பான சாலை சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான நுழைவாயிலாக புதுச்சேரி- கடலூர் சாலை இருந்து வருகிறது. இந்த வழியாக நிமிடத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலை பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால் பல இடங்கள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பல கோடி ரூபாய் செலவில் ‘பேட்ஜ்வொர்க்’ என்ற பெயரில் சீரமைப்பு பணி மட்டுமே நடந்தது. ஆனாலும், சில நாட்களிலேயே மீண்டும் சாலை பழுதானது. இந்த நிலையில் தற்போது பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மேலும் சேதமடைந்து பெரிய பள்ளங்களாக மாறி விட்டன. தொடர் விபத்து இதனால் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கன்னியகோவில், காட்டுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் சாலைகள் படுமோசமாக காட்சியளிக்கின்றன. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை தற்காலிகமாக சரி செய்யும்பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்குப் பிறகு தொலைநோக்க பார்வையுடன் தரமான சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.