பிரியங்கா காந்தி கடும் தாக்கு–பாஜக – 220 மாத ஆட்சியில் 225 ஊழல்கள்…
220 மாத ஆட்சியில் பாஜக 225 ஊழல்களை செய்துள்ளது என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் சமபலத்துடன் களத்தில் உள்ளதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியது. இது தொடர்பாக சமீபத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தி இருந்தது.இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தொடங்கி உள்ளார். இதனிடையே ஜபல்பூரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரியங்கா அரசியலிலும் மதத்தைப் போல் நம்பிக்கை இருக்க வேண்டும். தலைவர்களின் இதயங்களும் மக்கள் மீதும் நாட்டின் மீதும் அதே நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். விடுதலைக்காகப் போராடியவர்கள் நாட்டின் மீது அதே நம்பிக்கை வைத்திருந்தனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் 220 மாத ஆட்சியில் 225 ஊழல்களை செய்துள்ளது பாஜக. தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறும் பாஜக, அதனை நிறைவேற்றுவதில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்; 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும், பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், விவசாயிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும், 100 யூனிட் இலவசம் மின்சாரம், 200 யூனிட் மின்சாரத்திற்கு 50% மின் கட்டணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.