பா ஜ க ஆதரவு சுயேச்சை எம் எல் ஏ க்களுடன்மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை

அமைச்சரவை விரிவாக்கம்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில் முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளை என்.ஆர்.காங்கிரசும், சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை பா.ஜ.க.வும் எடுத்துக்கொண்டுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போதே நியமன எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என ஒட்டுமொத்தமாக 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களிடம் உள்ளதால் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு பா.ஜ.க. வலியுறுத்தியது. ஆனால் அதை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுத்துவிட்டார்.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்
சட்டமன்ற தேர்தல் காலத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை தேர்தலுக்குப்பின் பதவிகள் தருவதாக கூறி பா.ஜ.க. தங்கள் கட்சியில் சேர்த்தது. இதேபோல் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோருக்கு வாரிய தலைவர்கள் பதவி தருவதாக கூறி அவர்களது ஆதரவையும் பா.ஜ.க. பெற்றது.
இதுதொடர்பாக பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை வலியுறுத்தியபோது, தற்போது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய தலைவர்கள் பதவி வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர்.
குற்றச்சாட்டு
அவர்கள் தாங்கள் பா.ஜ.க.வுக்கு அளித்துவரும் ஆதரவினை வாபஸ் பெறவும் முடிவு செய்தனர். தங்கள் அதிருப்தியை சபாநாயகர் செல்வத்தை சந்தித்து தெரிவித்தனர். பதவி மட்டுமின்றி தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் நடக்கும் பணிகள் கூட தங்கள் தொகுதிகளில் நடைபெறவில்லை என்று ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டினார்கள்.
இதுதொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவை வந்த மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல் ஆகியோரை சந்தித்தும் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர். அவர்களை மத்திய மந்திரி பிரகலாத் படேல் சமாதானப்படுத்தினார்.
மேலிட பார்வையாளர் ஆலோசனை
இந்தநிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா புதுச்சேரி வந்தார். அவர் அக்கார்டு ஓட்டலில் பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமாதானம்
கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் உள்ளிட்ட தங்கள் தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து விளக்கினார்கள். தங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
அவர்களது கருத்துக்களை கேட்டுக்கொண்ட மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, இதுகுறித்து கட்சி மேலிடத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் அதிருப்தியில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தினார். கட்சியின் மேலிட தலைவர்கள், மத்திய மந்திரிகளை சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.