தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். பிறந்த நாள் பார்ட்டிக்கு மட்டும் ரூ.2கோடி செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சேலம் தாதகாபட்டி குமரன்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51), பாஜ பிரமுகரான இவர், சேலத்தில் ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தினார். இந்நிறுவனத்தின் கிளைகளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில்அடைத்தனர். இதையடுத்து அவரை சேலம் போலீசார் 3நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.இதில் பாலசுப்பிரமணியம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், திருச்சி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 35 ஆயிரம் பேரிடம் ரூ.400 கோடி வசூலித்துள்ளார். ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் பிடித்து கொடுத்தால் கமிஷனாக ரூ.14 ஆயிரம் கொடுத்துள்ளார். இவ்வாறு ரூ.90 கோடி கமிஷனாக கொடுத்துள்ளார். மீதம் உள்ள தொகையை அவர் வைத்துக்கொள்வார். இப்படி கிடைத்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் ரூ.20 கோடி ரூபாயை டெல்லியை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஊழியர் ஒருவர் ரூ.5.40 கோடியை ஏமாற்றிச் சென்றுவிட்டார். வெளிநாட்டில் ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2021ல் இவரதுபிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். சேலத்தில் பிரபலமான ஓட்டலில் நடந்த விழாவில் 500 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொண்டவர்களுக்கு தங்க சங்கிலி, தங்க நாணயத்தை பரிசளித்துள்ளார். இதற்கு மட்டும் ரூ.2 கோடி செலவு செய்துள்ளார். இவ்வாறு போலீசாரிடம் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் எங்கெல்லாம் நிலம் வாங்கி குவித்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.