பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு,ஜாமீன் தள்ளுபடி
கரூர் மாவட்டம் குளித்தலையில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்த பழங்குடியின மாணவிக்கு 2021-ல் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கல்லூரி முதல்வரும், அதிமுக நிர்வாகியுமான செந்தில்குமார், விடுதி வார்டன் அமுதவள்ளி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்குமார் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார். அவர் சிறையில் இருந்தபடியே பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினரை ஆட்களை அனுப்பி மிரட்டி வருகிறார். எனவே விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது. சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பழங்குடியின மாணவி ஒருவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆகும் ஆசையில் குளித்தலை நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றம் கடுமையானது. மாணவர்கள் தாங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர். குறிப்பாக மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குவது கல்வி நிலையத்தின் கடமையாகும். கல்வி நிலையங்களில் பாலியல் சுரண்டல் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதார்கள் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. எனவே இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கை கரூர் மகிளா வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர்கள் மீதான பாலியல் வழக்கை கரூர் மகிளா நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்