பத்ம விருதுகளுக்கு தேர்வானோருக்கு வாழ்த்துக்கள்…
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மாசுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். தமிழகத்தில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஸ்குவாஷ் வீரர் ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேரும் பாராட்டுக்குரியவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பத்ம விருதுகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக விஜயகாந்தின் கலைப்பணிக்கு மிகச்சிறந்த அங்கீகாரத்தை மத்திய அரசு அளித்திருக்கிறது.பாமக தலைவர் அன்புமணி: பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட 5 பேருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேருக்கும் எனது வாழ்த்துகள். இதேபோல், பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மறைந்த தேமுதிகதலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டி ருப்பது மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துகள். சமக தலைவர் ரா.சரத்குமார்: தமிழகத்தைச் சார்ந்த 7 பேர் உட்பட 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன். பத்ம விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். வி.கே.சசிகலா: இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் மூலம், பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள 30 பெண்களை உள்ளடக்கிய 132 நபர்களுக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.