நீதிபதி நாகரத்னா விமர்சனம்–பண மதிப்பிழப்பு ரிசர்வ் வங்கிஒப்புதல்….?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு திடீரென ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். இந்த நிலையில் பண மதிப்பிழப்புக்கு எதிராக 57 ரிட் மனுக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு அறிவித்தது தவறான முடிவு. இத்தகைய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தாக வேண்டும். இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என மனுதாரர்கள் தரப்பிலும், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்கப்பட்டது. இதில் தடை விதிக்கப்பட்டால் முந்தைய காலத்திற்கு செல்லும் சூழல் ஏற்படும். அதனால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டாம்’’ என ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக 4 நீதிபதிகளும், எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்தார்.ஒன்றிய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பணமதிப்பிழப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன் என நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு வழக்கில் விரிவான விசாரணைக்காக அதிக நீதிபதிகள் கொண்ட நீதிபதிக்கு அனுப்ப நீதிபதி கவாய் பரிந்துரை செய்தார். வழக்கில் மேலும் பல கேள்விகளுக்கு பதில் காணவேண்டியுள்ளதால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் சட்ட விதிகள்படி ஒன்றிய அரசு முடிவெடுக்க முடியாது என்று நீதிபதி நாகரத்னா தீர்ப்பளித்தார். ஒன்றிய அரசு சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியத்தை காக்க தேவைப்பட்டால் அவசர சட்டம் கூட நிறைவேற்றி இருக்கலாம். பணமதிப்பிழப்புக்கான ஒட்டுமொத்த நடவடிக்கையும் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது. எந்த பரிசீலனையும் மேற்கொள்ளாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டது. ரகசியம் தேவை என ஒன்றிய அரசு கருத்தியிருந்தால் அவசரச்சட்டம் மூலம் நிறைவேற்றியிருக்கலாமே? எனவும் கேள்வி எழுப்பினார்.