நீக்கம் – நோக்கம் – தாக்கம்….370 சட்டப்பிரிவு…
பட்டியலின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கள், தேர்தல்களில் இடஒதுக்கீடு என்பது ஜம்மு & காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒருவேளை காஷ்மீரில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை, இஸ்லாமிய சமூகத்தில் ஜாதிப் பிரிவுகள் கிடையாது என்பதால் அங்கு இடஒதுக்கீட்டுக்கான அவசியம் தேவையில்லை என்று யாராவது கூறினால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருக்கின்றது என்பது தெரியுமா?ஏழைக் குழந்தைகளின் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் கல்வி உரிமைச் சட்டம். ஆனால், இது ஜம்மு & காஷ்மீரில் செல்லுபடியாகாது என்றால் காஷ்மீரில் கல்வி தேவையில்லை என்று அர்த்தமா அல்லது காஷ்மீரில் ஏழைகளே இல்லை என்று அர்த்தமா?காஷ்மீர் மாநிலக் கட்சிகள் மற்றும் ஒரு சில எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் காஷ்மீரின் தனித்தன்மை, கலாச்சாரம் என்ற கோஷத்திற்குப் பின்னால் ஒளிந்திருப்பது மதவாதமும் அடிப்படைவாதமும்தான். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால் பிற மதத்தினர் அங்கே குடியேறுவது அதிகரித்து விட்டால் முஸ்லிம் மெஜாரிட்டி என்பது கேள்விக்குறியாகி விடுமோ என்ற தேவையில்லாத பயம்தான் இவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். இவ்வாறாக எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் நாங்கள்தான் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு நாட்டின் பிற பகுதிகளில் வாக்கு வங்கி அரசியலைத் தொடரலாம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.அரசியல் சட்டப்பிரிவு 370. இதுவரைக்கும் காஷ்மீரத்துக்கு மத்திய அரசால் பல்லாயிரம் கோடிகள் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் அதற்கேற்ற வளர்ச்சியோ வேலைவாய்ப்புகளோ அங்கே உருவாகவில்லை. இதற்கு அங்கே ஆட்சியில் இருந்த மாநிலக் கட்சிகளும் அவற்றுக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களும் ஒரு காரணம். இந்த நிலையில் 370 பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதலீடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வேலைவாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. அமைதி திரும்பியிருக்கிறது, கல்வீச்சு சம்பவங்கள் பெருமளவில் குறைந்திருக்கின்றன.இறையாண்மை என்பது இந்தியாவுக்கு மட்டும்தான். சுய நிர்ணய உரிமையோ பிரிந்து போகும் உரிமையோ இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் எக்காலத்திலும் இல்லை. இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. இதையேதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு வரலாற்றுத் தவறு – அரசியல் காரணங்களுக்காக சரி செய்யப்படாமல் இருந்தது. கடந்த 2019-ல் அது திருத்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகத்தான் நீக்கினார்கள் என்று குற்றம் சாட்டினாலும் தவறைத் திருத்துவது தவறா?