நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
காரைக்கால் உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்கி, ஊழியர்களின் ஊதியத்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி உடனே வழங்கவேண்டும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறைகளில் வழங்கப்படுவது போல் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த வாக்குறுதிபடி உடனே கமிட்டி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க செயலாளர் லதா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், துணை தலைவர்கள் அய்யப்பன், சுப்புராஜ், உலகநாதன், சந்தனசாமி, இணை பொது செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் பொருளாளர் அப்துல் ரஹூம் நன்றி கூறினார்.