நாராயணன் திருப்பதி–பாஜக வதந்தி பரப்பியதுஉண்மை.
தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் மாநில பாஜக வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இது போன்ற வதந்திகளை பரப்பியதற்காக கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.பீகார் மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியது, தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் மற்றும் செயலாளர்கள் ராஜினாமா போன்றவற்றால் பாஜக தொடர்ந்து பேசுபொருளாகி இருக்கிறது.இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்தார். அதில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய அவர், “வதந்திகளால் தமிழ்நாட்டில் வசிக்கும் வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தயாநிதிமாறன் போன்ற சில திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்தி பேசும் வட இந்திய தொழிலாளர்களை அவமதித்து பேசினர்..
அவர்களை பானிபூரி வாலா மற்றும் ரொட்டி வாலா என்று இழிவுபடுத்தினர். தற்போது எழுந்துள்ள வட மாநில தொழிலாளர் பிரச்சனைக்கு மூலக்காரணம் இதுதான். திமுகவால் நிதியுதவி செய்யப்படும் யூடியூப் சேனல்கள் வட இந்திய தொழிலாளர்கள் மீது தொடர்ந்து விஷத்தை கக்கி வந்தன. இந்த விசயத்தை தூண்டி விட்டதில் திமுக பெரும் பங்கு வகிக்கிறது. அதுதான் தற்போது அச்சத்தை கொடுத்து வெளியேற செய்துள்ளது.
பீகார் மாநில பாஜகவும் வதந்தியை பரப்பியது. அவர்களை கட்சி கண்டித்தது. பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஜகவினரிடம் நாங்கள் பேசினோம். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பரவும் வதந்தி குறித்து அவர்களிம் விளக்கினோம். உறுதிபடுத்தப்படாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாடு காவல்துறை செயல்பாடு இல்லாமல் உள்ளது. தற்போது அவர்கள் நடிக்கிறார்கள். திருப்பூரில் 3 மாதங்களுக்கு முன்னர் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தபோது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நாங்கள் தமிழ்நாடு காவல்துறையை எச்சரித்தோம். அவர்கள் கேட்கவில்லை.
புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் ஆளும் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. கொரோனா பரவலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வட மாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்று கூறினார். அதன் பின்னர் இது தமிழர்களுக்கான மண் என்றார். இது திமுகவின் நிலையை காட்டுகிறது. உள்கட்டமைப்பு விவகாரங்களில் வட மாநில தொழிலாளர்கள் நமக்கு உதவி செய்கின்றனர்.
எனவே வட மாநில தொழிலாளர்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அரசு அதை செய்ய தவறிவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தமிழ்நாடு காவல்துறை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்து துன்புறுத்துகிறது. அது புனையப்பட்ட வழக்காகும். எனவே 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். அதில் எந்த தவறும் இல்லை.” என்று தெரிவித்து உள்ளார்.