திருவண்ணாமலை–பங்குனி மாத பவுர்ணமி2வது நாளாக இன்று கிரிவலம்..
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 2வது நாளாக இன்று காலையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருப்பது திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயில். அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய சிறப்புக்குரிய இத்திருத்தலத்தில் அக்னி மலையாக அண்ணாமலையாரே எழுந்தருளியிருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 9.54 மணிக்கு தொடங்கி, இன்று பகல் 12.29 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பகல் முழுவதும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலை 5 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக அதிகரித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது தரிசனம் செய்யும் நிலை இன்றும் ஏற்பட்டது. வழக்கம்போல அமர்வு தரிசனம் சிறப்பு தரிசனம் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசன வரிசை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.