தலைநகர் வாஷிங்டனில் டிரம்பிற்கு எதிராக குவிந்த பல ஆயிரம் பேர்.! பரபரப்பு..
டிரம்ப் பதவியேற்பிற்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆயிரம் மக்கள் வாஷிங்டனின் தெருக்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பல அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் முதலில் பதவியேற்ற போது பெண்கள் இதேபோல பெரியளவில் திரண்ட போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கருக்கலைப்பு விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சியில் கருக்கலைப்பிற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது அந்நாட்டுப் பெண்கள் தங்களின் உரிமை பறிக்கப்படுவதாகப் பார்க்கிறார்கள். அதேபோல துப்பாக்கி விவகாரத்திலும் அங்கு டிரம்ப் ஆட்சியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரிக்கும் சூழலில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், டிரம்ப் அரசு அதற்கு நேர்மாறாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் எனத் தெரிகிறது.இது தவிரக் காலநிலை மாற்றம், புலம்பெயர்ந்தோர் உரிமைகள் என டிரம்ப் கொள்கைக்கு எதிராக இருக்கும் பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாகப் புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் டிரம்ப் தீவிரம் காட்டுவார் என்றே தெரிகிறது. ஏனென்றால் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர்ந்து கூறி வந்தார். எனவே, இந்த முறை ஆரம்பத்திலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளில் டிரம்ப் தீவிரம் காட்டுவார் எனத் தெரிகிறது.