தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை…?
: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் உருவாகும் கட்டிட கழிவுகளை திறம்பட நிர்வகிக்க, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கழிவு மேலாண்மை விதிகள், 2016ஐ அறிவித்துள்ளது. அதன்படி, உருவாக்கப்படும் கழிவுகளை சேகரித்து, பிரித்து, சேமிக்க வேண்டும். ஒரு நாளில் 20 டன் அல்லது அதற்கு மேல் அல்லது ஒரு மாதத்திற்கு 300 டன் கழிவுகளை உருவாக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த அனுமதிகளைப் பெற வேண்டும்.
கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை உள்ளாட்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சேகரிப்பு மையத்தில் சேமித்தல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க வசதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் தலா நாளொன்றுக்கு 400 டன் திறன் கொண்ட கழிவுகளை செயல்படுத்துவதற்கான வசதிகளை சென்னை மாநகராட்சி நிறுவியுள்ளது. உள்ளாட்சி அமைப்பால் அடையாளம் காணப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பகுதி தவிர, சாலைகள், நதிக்கரைகள், நீர்நிலைகள், ஒதுக்குப்புறமான பகுதிகள் போன்றவற்றில் கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அகற்றினால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்.