டெல்லியையே மிரட்டிய அண்ணாமலை….?
பெண் பத்திரிகையாளரிடம் கடுமையாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து டெல்லி இந்திய பிரஸ் கவுன்சிலிடமே புகார் அளித்து இருப்பதாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “தன்னுடைய இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் மறைக்க, பத்திரிகையாளர்களை மிரட்டுகிறோம் என்ற பெயரில் அண்ணாமலை செய்யும் இந்த கோமாளித்தனத்தை இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எடுத்துச் சென்றுள்ளது.அந்த புகாருக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை பிரஸ் கவுன்சிலின் வரம்பு கூட தெரியாமலும், பிரஸ் கவுன்சிலின் மாண்புமிகு தலைவரை தவறாக வழிநடத்தும் வகையிலும் அவரையே மிரட்டும் தொனியிலும் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலையின் இந்த கேவலமான நடவடிக்கையை இதற்கான பதில் மனுவில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் இந்திய பிரஸ் கவுன்சிலின் மாண்புமிகு தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வகையில், ஏற்கனவே அண்ணாமலைக்கு எதிராக விசாரணையில் உள்ள இந்த புகாருடன், நேற்று (01.10.23) அண்ணாமலை பெண் பத்திரிகையளாரை மிரட்டும் வகையிலும், பொதுவெளியில் அவருடைய கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் நடந்துகொண்டு உள்ளதை இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் உறுதியளிக்கிறது.ஊடக நிறுவனங்களுக்காக களத்திற்கு சென்று அண்ணாமலை போன்ற நபர்களிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டியது நிறுவனங்களின் கடமை. ஆனால், தன்னுடைய கடமையிலிருந்து தமிழ்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்த தவறி வருவதால் அண்ணாமலை நேற்று (01.10.23) ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடக்கும் அளவிற்குசென்றுள்ளார் .ஆகவே, தமிழ்நாட்டின் ஊடக நிறுவனங்கள் இனியும் மௌனம் காக்காமல் அண்ணாமலைக்கு பாடம் புகட்டும் வகையில், இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களை அவர் நிறுத்திக்கொள்ளும் வரை அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.பாஜக மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு அண்ணாமலை இதுபோன்று கீழ்த்தரமாக நடந்துகொள்வது, பாரதிய ஜனதா கட்சியின் நன் மதிப்பையே பாதிக்கின்றது என்ற வகையில், அக்கட்சியில் உள்ள தலைவர்கள், குறிப்பாக பெண் தலைவர்கள் அண்ணாமலையின் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
களத்திற்கு செல்லும் செய்தியாளர்கள், அண்ணாமலை இனியும் இதுபோன்று நடந்துகொண்டால், ஒரு நொடியும் பொறுக்காமல் அந்த இடத்திலேயே அவருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும், அதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.தமிழ்நாட்டிற்கென்று ஒரு அரசியல் பாரம்பரியம் உள்ளது. அந்த நாகரிக அரசியல் களத்தில் அருவெறுப்பாக நடந்துகொள்ளும் அண்ணாமலை போன்றவர்களை பிற அரசியல் கட்சித் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.பத்திரிகையாளர்களை ஏலம் விட்டது, குரங்குகள் என்று கூறியது தொடங்கி தற்போது பெண் பத்திரிகையாளரை பொதுவெளியில் கண்ணியக் குறைவாக நடத்தியுள்ள அண்ணாமலையின் இந்த மூன்றாம் தர நடவடிக்கையை அனைத்து பத்திரிகையளார் அமைப்புகளும் எதிர்ப்பதற்கும், இந்த அநாகரிக செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.