Others
செல்லப்பிராணிகளுக்கு பிரச்சனையா? கவலை இனி இல்லை..
கால்நடை மருத்துவர்கள் குறித்து எளிதில் கண்டறிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சில் ”கால்நடை மருத்துவர்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள கால்நடை போலி மருத்துவர்களை கண்டறியவும் கால்நடைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பல பயன்பாட்டிற்காக ”கால்நடை மருத்துவர்” என்ற புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் கால்நடை மருத்துவர் செயலியை, மீன்வளம்-மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த செயலி மூலம் விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் செல்லப்பிராணிகளுக்கான சிகிச்சைக்கு முன்பதிவு செய்யவும், தடுப்பூசிகளைக் கோரவும் முடியும். மேலும் இந்த செயலி மூலம் கால்நடைகளுக்கு காணொளி மூலம் முதலுதவி தொடர்பான அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்க முடியும்.
இந்த நிலையில் தமிழகத்தில் போலி கால்நடை மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், இந்த செயலியில் அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் 5,585 பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் உள்ளனர். இவர்களில் 3,654 மருத்துவர்கள் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் சுமார் 1,100 மருத்துவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், மேலும் அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள 400 முதல் 450 கால்நடை மருத்துவர்கள் இந்த செயலில் பதிவு செய்யப்படவில்லை.அது மட்டும் இல்லாமல் விலங்கு தொழில்முனைவோர் வங்கி கடன்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதில் மருத்துவர்களின் ஆதரவை பெறலாம். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு , உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற விலங்குகளின் விவசாயம் பற்றிய பொதுவான தகவல்களும் கால்நடை மருத்துவர் செயலியில் கிடைக்கும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.