சென்னை காவல் ஆணையாளர்–காவலர்கள்பணியில்இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது.
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி, காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் (DGP/HoPF) மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் (COP/GCP) ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர்.இதை வலியுறுத்தி, இன்றும் (03.07.2023) ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் செல்போனைபயன்படுத்துவதால் அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும் இக்கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டு குறிப்பாக, சட்டம் மற்றும் ஒழுங்கு. பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி. கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை பணியை நியமிக்கும்போதும், பணியைப் பற்றிவிவரிக்கும் போதும் காவல் ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரிசெய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது என்பதால் இச்சமயங்களில், செல்போனை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. எனவே, போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது எனவும் காவல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.