தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. இந்த குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டியில், 10-12 வயது பிரிவில், குழந்தைகள் என அழைக்கப்படும் இரு ஷோ ஜம்பிங் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்பிரிவில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில், கோவை ஸ்டேபிள்ஸ் கிளப் சார்பில் பங்கேற்ற ஆராதனா ஆனந்த் (12) என்பவர் கலந்துகொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கம் வென்றார். இந்திய குதிரையேற்ற சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப்பில் ஆராதனா சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக அவரின் பயிற்சியாளர் சரவணன் தெரிவித்தார். ஆராதனா கூறுகையில், ‘‘10-12 வயது பிரிவில், நானும் எனது குதிரையும் 80 செமீ உயரத்தில் தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. இந்த ஆண்டு நான் 12-14 வயது பிரிவுக்கு சென்றவுடன் இது 100 செமீ ஆக அதிகரிக்கும் என்கிறார். ஆனால் நான் ஏற்கனவே 105 செமீ முதல் 110 செமீ வரையிலான தாவல்களை மிக எளிதாக முடித்துவிட்டேன். அதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மேலும், ஐரோப்பாவில் ஒரு பயிற்சி முகாமில் ஈடுபட்டு அங்கு நடக்கும் சர்வதேச கிளப் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டு உள்ளேன்’’ என்றார்.